10 நிமிட தாமதம் : அனுமதி மறுத்ததால் ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு !
தாம்பரத்தில் உள்ள அரசு பேருந்து கழகத்தில் ஹரிமுத்து என்ற ஊழியர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
தாம்பரத்தில் உள்ள அரசு பேருந்து கழகத்தில் ஹரிமுத்து என்ற ஊழியர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பேருந்து கழகத்திற்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அனைத்து பேருந்து ஊழியர்களும் பேருந்து கழகத்திற்கு சென்று தான் அவரவர் பணிகளைத் தொடங்குவர். நேற்று காலை ஹரிமுத்து டிப்போவிற்கு 10 நிமிடம் தாமதமாகச் சென்றுள்ளார். அதனால், பேருந்து கழக கிளை மேலாளர் அவரை பேருந்து ஓட்ட வேண்டாம் என்று கூறி பணி வழங்க மறுத்துள்ளார்.
ஹரிமுத்து இனிமேல் இந்த தவறு நடக்காது என்று மேலாளரிடம் கெஞ்சியுள்ளார். இருப்பினும், மேலாளர் ஹரிமுத்துவை பேருந்து எடுக்க அனுமதிக்கவில்லையாம். இதனால், விரக்தி அடைந்த ஓட்டுநர் அங்கிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, அவர் மீது ஊற்றிக் கொண்டு பற்ற வைக்க முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ஹரிமுத்து மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய ஹரிமுத்து, “10 நிமிடங்களே தாமதமாக வந்தேன். ஆனாலும் என்னைப் பேருந்து ஓட்ட அனுமதிக்கவில்லை. எவ்வளவோ மேலாளரிடம் கெஞ்சிப் பார்த்தேன். அப்போதும் அவர் பேருந்தை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்” என்று கூறியுள்ளார்.