சென்னையில் ரூ.1.14 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை
துபாய் மற்றும் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது,.
துபாயில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகளை இறக்கிய பின் ஊழியர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் இருக்கையின் அடியில் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள், சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அதிகாரிகள் இருக்கையின் அடியில் இருந்து சுமார் 1.16 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அசாம் தலைநகர் குவகாத்தியில் இருந்து வந்த விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த மொகபத்கான் என்ற பயணி மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது மின்னணு சாதனங்களுக்குள் நூதன முறையில் தங்கத்தை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்தும் சுமார் 1.16 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இரு விமானங்களில் இருந்தும் சுமார் 2.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக மொகபத்கான் என்ற பயணியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.