‘ஹெல்மெட் போட்டுகொண்டு டூவீலரில் கெத்தாக பயணம் செய்த நாய்’ : ஆறறிவு மனிதர்களுக்கு பாடம் சொல்லும் வீடியோ!
நாய் ஒன்று பின்புறம் அமர்ந்து முன்புறம் உள்ள உரிமையாளரின் தோள்மீது கால்களை போட்டபடி மிடுக்காக செல்கிறது.
பரபரப்பான சூழலில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், அதில் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்கள் 73 சதவீதம் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் விபத்தில் உயிர் இழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் நம் ஊரிலோ ஒருவர் ஹெல்மெட் அணிவதே குதிரைக்கொம்பாகியுள்ளது.
Dog wearing helmet for safety in Tamilnadu..
Really admiring the owner’s care..❤❤ pic.twitter.com/pmEvwf2Dq4
— Pramod Madhav (@madhavpramod1) January 7, 2020
இத்தகைய அலட்சியமான மனிதர்கள் மத்தியில், ஐந்தறிவு உள்ள நாய் ஒன்று ‘ஹெல்மெட்’ அணிந்தபடி தனது உரிமையாளருடன் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று வியக்க வைத்துள்ளது. சென்னை கோயம்பேடு-விருகம் பாக்கம் சாலையில் உள்ள சின்மயா நகர் பகுதியில் ‘ஹெல்மெட்’ அணிந்து நாய் ஒன்று பின்புறம் அமர்ந்து முன்புறம் உள்ள உரிமையாளரின் தோள்மீது கால்களை போட்டபடி மிடுக்காக செல்கிறது.
விதிமுறைகளையும், சட்டங்களையும் மதிக்காமல், உயிர்பயமும் இல்லாமல் சுற்றி வரும் ஆறறிவு மனிதர்களுக்கு மத்தியில் வாழும் இந்த ஐந்தறிவு ஜீவனுக்கும் சரி, அதன் உரிமையாளருக்கும் சரி ஒரு பெரிய சல்யூட் வைக்கலாம்!