ஹெச்.ராஜா, பாமக மீது அவதூறு வழக்கு தொடரப்படும்: திருமாவளவன்

 

ஹெச்.ராஜா, பாமக மீது அவதூறு வழக்கு தொடரப்படும்: திருமாவளவன்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதும், பாமக கட்சி மீது விசிக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதும், பாமக கட்சி மீது விசிக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் படத்தின் முன்னர் நின்று கொண்டு ஒரு இளைஞன், தலித் அல்லாத சமூகத்தினரைச் சீண்டும் வகையில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் முழக்கங்களை எழுப்புகிறான். அது மிகவும் இழிவான, முதிர்ச்சியற்ற ஒரு நடவடிக்கையாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞன் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. அந்த இளைஞனின் நடவடிக்கையைக் கண்டிப்பதை விடவும், அவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவன் என்று முத்திரைக் குத்துவதிலேயே பாட்டாளி மக்கள் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவன் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அவனைப் பற்றிய எந்த தகவலையும் அறியாமல், திடீரென அந்த இளைஞன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவனென்று திட்டமிட்டு அவதூறு பரப்புவது, எம்மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் அப்பட்டமான அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும்.

பொதுமக்களிடையே எமக்கு எதிரான கருத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிற வகையில் பாமக-வினர் மிகவும் மலிவான அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர். இதன்மூலம் சாதிப்பகையை மூட்டி தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் நோக்கமாகும். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எச்.ராஜாவும் வழக்கம்போல எம் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் கக்கியிருக்கிறார். எமது கட்சி இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு மறைமுகமாக நெருக்கடியை ஏற்படுத்துவதே இந்தச் சாதிய மதவாத சக்திகளின் உள்நோக்கமாகும்.

எனவேதான், அந்த இளைஞன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருவதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதில் குறியாக உள்ளனர். இவர்களின் உண்மை முகத்தைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்நிலையில், திட்டமிட்டு எம் மீது அவதூறு பரப்பும் பாமக-வினர் மற்றும் எச். ராஜா ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.