‘ஸ்டாலின் போட்டியிடுவதே மக்களின் விருப்பம்’ – பூண்டி கலைவாணன் பேட்டி

 

‘ஸ்டாலின் போட்டியிடுவதே மக்களின் விருப்பம்’ – பூண்டி கலைவாணன் பேட்டி

திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக இருப்பதாக பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக இருப்பதாக பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, வருகிற 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும் ஸ்டாலின் போட்டியிட வேண்டும்  என விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக இருப்பதாகவும், திமுக ஆலோசனை நடத்தி தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற வைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.