வைகுண்ட ஏகாதசி விரதம் ஏன் கடைபிடிக்க வேண்டும் ?  

 

வைகுண்ட ஏகாதசி விரதம் ஏன் கடைபிடிக்க வேண்டும் ?  

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான செல்வங்களையும் நல்ல உடல் ஆரோக்கியத்தினையும் அடைவார்கள் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

வைகுண்ட ஏகாதசி உருவானதற்கான புராண கதையினை பற்றியும் இந்த விரதத்தினை மேற்கொள்வதால் ஏற்படும் சகல விதமான நன்மைகள் பற்றியும் பார்போம். முரன் என்ற ஓர் அசுரனை மகா விஷ்ணு சம்ஹாரம் செய்யப்புறப்பட்டார்.

lakshmi

முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான் பின்னர் பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.

பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன் பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண் முரனை போருக்கு அழைத்தாள்.

பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன் பெண்ணே உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும் என்று அம்பை எடுக்க முனைந்தபோது அந்தப் பெண் ஹூம் என்று ஓர் ஒலி எழுப்பினாள். அந்த கணத்தில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.

vishnu

அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான் தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன் அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டிஏகாதசியே நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று அருளினார்.

வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதமாக மார்கழி மாதம் விளங்குகின்றது .

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி உற்பத்தி ஏகாதசி என்றும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்றும் நம் முன்னோர்கள் அழைத்து வருகின்றனர் . 

vishnu

அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். .

ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட ஏகாதசி விரதம் வைகுண்ட பதவிக்கு வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

வைகுண்ட ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது.

ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். 

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

vishnu

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம்  இருக்கவேண்டும். ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம்.

வைகுண்ட ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். 

பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

vishnu

இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். 

ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை சேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

விரதத்தை முடிப்ப தென்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து பிரசாதமாக உண்ணலாம். 

vishnu

விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்க செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவதுடன். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும் என்பது அனுபவரீதியாக நிருபிக்கபட்ட ஒன்றாகும்.