வேலுமணி வீட்டிலிருந்து தான் கட்டுக்கட்டாக பணம் போகிறது; இதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? உதயநிதி ஆவேசம்!
அமைச்சர் வேலுமணி வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் செல்கிறது அது வருமானவரி துறைக்கு தெரியவில்லையா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அமைச்சர் வேலுமணி வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் செல்கிறது அது வருமானவரி துறைக்கு தெரியவில்லையா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீவிர பிரசாரம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக-வும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. தங்களது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கு செக்
ஆனால் எதிர்க்கட்சிகளின் வேகத்தைக் குறைக்க ஆளுங்கட்சி தரப்பில் சில செக் வைக்கப்பட்டும் வருகின்றது. அதில் ஒன்று தான் ஐடி ரெய்டு. வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக காட்பாடியில் துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. அதில், ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிவித்தனர் வருமான வரித்துறையினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தரப்போ, மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சி இது என்று பொங்கி எழுந்தன.
சுதந்திரமாகச் செயல்படும் ஆளுங்கட்சி
இது ஒருபுறமிருக்க, தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிக்குவது எல்லாமே எதிர்க்கட்சியினர் மட்டும் தான்.அப்படி என்றால் அதிமுகவினர் நேர்மையாக அரசியல் களத்தில் நிற்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கூறவிட முடியாது. இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள், சில்வர் குடங்கள், பரிசு பொருட்கள் என பொது இடத்தில் வைக்கும் விநியோகிக்கும் அளவிற்கு அதிமுகவினர் சுதந்திரமாகவே செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழ, இதே கேள்வியுடன் கூடுதல் தகவல் ஒன்றையும் அளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி.
ஆட்சியே இன்னும் சில நாட்கள் தான்…!
சூறாவளி பிரசாரத்திற்கு இடையே பிரபல வார் இதழ் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ள அவர், ‘ஐடி, சிபிஐ இந்த இரண்டையும் வைத்து கொண்டு மத்திய அரசு எதிர்க்கட்சியினரைப் பணி செய்யவிடாமல் முடக்க பார்க்கிறது. நாங்கள் அதற்கெல்லாம் பயப்படுபவர்கள் கிடையாது. துரைமுருகன் வீட்டில் தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்திய நீங்கள் வேலுமணி வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை. அவர் வீட்டிலிருந்து தான் கட்டுக்கட்டாக பணம் தமிழகம் முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சியே இன்னும் சில நாட்கள் தான். அதற்குள் இத்தனை ஆட்டம் போடுகிறார்கள்’ என்று தனக்கே உரிய பாணியில் சொல்லிவிட்டு அங்கிருந்து கடந்துள்ளார்.
வேலுமணி வீட்டில் சோதனை செய்தால் அங்கேயும் பணம் பார்க்கலாம் என்ற உதயநிதியின் கருத்தை ஆதரித்து குரல் கொடுக்காமல், உதயநிதி நல்லா பேசக்கத்துக்கிட்டாருப்பா என்று திமுகவினரோ பெருமை பேசி வருகின்றனர்.
இதையும் வாசிக்க: என் அம்மா போன்றவர், ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை தருகிறார் : என்.டி. ராமராவின் மனைவி மீது நடிகர் பரபரப்பு புகார்!