வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி! – அம்பத்தூரில் கடத்தப்பட்ட ஏஜெண்ட் புதுவையில் மீட்பு
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றிய துணை ஏஜெண்டை பணம் கொடுத்து ஏமாந்த நபர் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் வாங்கி ஏமாற்றிய துணை ஏஜெண்டை பணம் கொடுத்து ஏமாந்த நபர் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் துணை ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். நேற்று வெளியே சென்ற திலீப்பை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து திலீபின் மனைவி சுதா அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா, திலீபின் செல்போன் உரையாடல், டவர் லொகேஷன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது, திலீபின் மொபைல் போன் ஆப் செய்யப்படவில்லை என்பதும், அது புதுச்சேரியில் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. மொபைல் லொகேஷன் அடிப்படையில் புதுச்சேரி சென்ற போலீசார் அங்கு திலீப்பை மீட்டனர். போலீசார் வந்ததை அறிந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். தமிழ் சந்திரன், நரேஷ் குமார், சரவணன் ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு அம்பத்தூர் வந்த போலீசார் திலீப் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, சரவணன் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் ஏஜெண்ட் தொழிலை செய்து வந்தது தெரிந்தது. அவர் தன்னிடம் வந்தவர்களிடம் இருந்து பெற்ற ரூ.10 லட்சத்தை திலீப்பிடம் கொடுத்துள்ளார். ஆனால், திலீப் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். உரிய பதிலும் அளிக்கவில்லை. இதனால் அவரை கடத்தியது தெரியவந்தது. கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தப்பியோடியவர்களையும் தேடி வருகின்றனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.