வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது- மத்திய நிதியமைச்சகம் தகவல்

 

வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது- மத்திய நிதியமைச்சகம் தகவல்

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வங்கிகளில் இந்திய பண முதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில் பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. அதுபோல் 2016 நவம்பரில் சுவிட்சர்லாந்து அரசுடன் தகவல்கள் பரிமாறி கொள்ளும் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

சுவிஸ் வங்கி

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் வரி தொடர்பான தகவல்களை தன்னிச்சையாக பரிமாற்றம் செய்து கொள்ளும். அந்தஒப்பந்தத்தின்படி, கடந்த 2018ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்து இருந்த இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை கடந்த செப்டம்பரில் இந்தியாவிடம் அந்நாடு அளித்தது. இந்தியா உள்பட 75 நாடுகளுடன் வங்கி தகவல்களை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசு மேற்கொண்டுள்ளது. 

கருப்பு பணம்

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் மற்றும் இதர வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கருப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்கும்படி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில், இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே கையெழுத்திடப்பட்ட வரி ஒப்பந்தத்தின் இரகசிய விதிகளின்கீழ், இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது மற்றும் இதர வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கருப்பு பணம் குறித்த தகவலையும் தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளது.