வெறிச்சோடிய சென்னை: முக்கிய மேம்பாலங்கள் மூடல்!
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நோய் தொற்று உள்ளவர்களும், வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அடுத்து தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மேலும் சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. அதில், ஜெமினி, கத்திப்பாரா, கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி பாலம் உள்ளிட்ட மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் பயன்பாடு குறைந்துள்ளதால் இந்த பாலங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.