விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதா? உயர் நீதிமன்றம் காட்டம்!

 

விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதா? உயர் நீதிமன்றம் காட்டம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது

சென்னை: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

pon manickavel

இந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தைய, சிலை செய்த மாசிலாமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், இந்த வழக்கின் விசாரணை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வசம் சென்றது. அப்போதைய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார்.

veera shanmugamani

இதையடுத்து, இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

தொடர்ந்து தனக்கு ஜாமின் கோரி வீரசண்முகமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, விளம்பரத்திற்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதா? என காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், முறையாக விசாரணை நடத்தாமல் கைது நடவடிக்கை மேற்கொள்வதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தது. அத்துடன், வீரசண்முகமணிக்கு ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையும் வாசிங்க

அவமானத்தில் பெண் தற்கொலை; வங்கி ஊழியர்கள் அராஜகம்!