விமான நிலையத்தில் குழந்தையை மறந்த பெண்; சவுதியில் வினோதம்!

 

விமான நிலையத்தில் குழந்தையை மறந்த பெண்; சவுதியில் வினோதம்!

குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு தாய் மட்டும் விமானத்தில் பறந்த வினோத சம்பவம் சவுதியில் நிகழ்ந்துள்ளது

ரியாத்: குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு தாய் மட்டும் விமானத்தில் பறந்த வினோத சம்பவம் சவுதியில் நிகழ்ந்துள்ளது.

சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் பயணி ஒருவர், தனது குழந்தையை காணவில்லை என அலறியுள்ளார்.

அப்போது தான் விமானத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது, அப்பெண் தனது குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு விட்டு தான் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார் என்று. மேலும், அப்பெண் தனது குழந்தை இல்லாமல் மேற்கொண்டு விமானத்தில் செல்லவும் மறுத்துள்ளார்.

இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர், ஏர் டிராபிக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்து விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்ப அனுமதி கோரியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கடவுள் நம் பக்கம் இருக்கிறார். பயணி ஒருவர் அவர் குழந்தையை மறந்து விட்டுவிட்டு வந்து விட்டார். நாங்கள் உடனே திரும்பி வர முடியுமா? என அனுமதி கோருகிறார்.

கட்டுப்பாட்டு அறையும் உடனே அனுமதி கொடுக்க, விமானநிலையத்துக்கு மீண்டும் விமானம் திரும்பியுள்ளது. கடும் பதற்றங்களுக்குப் பிறகு தாயும், சேயும் ஒன்று சேர்ந்தனர். விமானம் வானில் எழும்பிய பிறகு தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பயணியின் ஆரோக்கிய கோளாறு காரணத்திற்காக மட்டுமே மீண்டும் உடனேயே தரையிறங்க அனுமதிக்கப்படும். ஆனால், இதுபோன்ற வினோத காரணங்களுக்காக விமானம் மீண்டும் தரையிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தான் அவசரமாக இருந்தாலும் லக்கேஜ் அல்லது வேறு ஏதாவது பொருட்களை மறக்கலாம். பெற்ற குழந்தையை மறக்கலாமா!?