விஜய்யின் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று!

 

விஜய்யின் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று!

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகின்றன

சென்னை: விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகின்றன.

நடிகர் விஜய்யின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று பூவே உனக்காக. 1996ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, வெளியான இப்படம் காதலையும், காதலர்களையும் கொண்டாடியது.

அதற்கு பிரதிபலனாக காதலர்களும் ‘பூவே உனக்காக’ படத்தை தூக்கி வைத்து கொண்டாடினார்கள். குறிப்பாக நடிகர் விஜய்யை குடும்பங்கள் கொண்டாட முக்கிய காரணமாக அமைந்த படம் இது.

pooveunakaga

படத்தில் தான் காதலித்த பெண்ணுக்காக அவளது பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்க குறும்புத்தனமாக விஜய் செய்யும் வேலைகள் ரசிக்கும்படியாக இருக்கும். தான் காதலித்த பெண் வேறு ஒருவரை காதலிக்கிறார் என்பது தெரிந்ததும், அவர்களை சேர்த்து வைக்க போராடுவார். மிகவும் வித்தியாசமான இந்த படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

pooveunakaga

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. “தோல்வியடைவதற்கு காதல் ஒண்ணும் பரிட்சை இல்லங்க. அது ஒரு ஃபீலிங். அந்த ஃபீலிங் ஒருமுறை வந்துடிச்சுன்னா, அத மறுபடி மறுபடி மாத்திட்டு இருக்க முடியாது”, என விஜய் பேசும் வசனம், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கும் காதல் டானிக்.

pooveunakaga

“இது காதல் கைகூடலேங்கிற விரக்தியால எடுத்த முடிவல்ல. தன் காதலையே கடைசி வரை நினைச்சுக்கிட்டு இருக்கணும். அதற்காக எடுத்த முடிவு. இந்த முடிவுகூட சுகமான ஒரு முடிவுதான்” எனப் பின்னணிக் குரல் ஒலிக்க, விஜய் நடந்துசெல்லும் அந்தக் க்ளைமாக்ஸ் காட்சி இன்றளவும் மனதை விட்டு அகலாமல் பசுமையாக இருக்கிறது.

pooveunakaga

பூவே உனக்காக வெளிவந்து 23 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக் போட்டு இதனை கொண்டாடி வருகிறார்கள். டிவிட்டரில் இதனை விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

ஏதோ நேற்று தான் குடும்பத்துடன் சென்று தியேட்டரில் ‘பூவே உனக்காக’ பார்த்தது போல் இருக்கிறது. அதற்குள் 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தாலும், காதலையும், காதல் தோல்வியையும் பாஸிட்டிவாக சொன்ன ‘பூ உனக்காக’ என்றும் உதிராத குறிஞ்சி மலர் தான்.