வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி: உயர் நீதிமன்றம் அதிரடி

 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி: உயர் நீதிமன்றம் அதிரடி

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசி சிலரால் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளில் ரேசன் அரிசி கடத்தலால் ஏற்பட்ட இழப்பு, கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர். 

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட விவரங்கள் கூறப்பட்டிருந்தன.மேலும், இலவச ரேசன் அரிசி திட்டத்தைப் பொறுத்தவரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதாரரீதியாக முன்னேறியவர்களும் இலவச அரிசியை பெற்று வருகிறார்கள். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேசன் அரிசி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. தேர்தல் லாபத்துக்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு அரசுகள் தள்ளிவிட்டன. எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே இலவச ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.