லிப்ட் கேட்டு பின் டிரைவர்களை கொலை செய்த கொடூரம்: அண்ணன், தங்கை கைது; அதிர வைக்கும் வாக்குமூலம்!

 

லிப்ட் கேட்டு பின் டிரைவர்களை கொலை செய்த கொடூரம்: அண்ணன், தங்கை கைது; அதிர வைக்கும் வாக்குமூலம்!

நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, பின் டிரைவரை கொலை செய்து, அவர்களது உடைமைகளைக் கொள்ளை அடிக்கும் சகோதரன், சகோதரி போலீசில் சிக்கினர்.

புதுதில்லி: நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி, பின் டிரைவரை கொலை செய்து, அவர்களது உடைமைகளைக் கொள்ளை அடிக்கும் சகோதரன், சகோதரி போலீசில் சிக்கினர்.

தில்லியில் அரசு போக்குவரத்து டிரைவரின் சடலம் சோனிப்பட் சாலையோரத்திலிருந்து சில நாட்களுக்கு முன் மீட்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிந்தது. அதே முறையில் ஆட்டோரிக்‌ஷா டிரைவர் ஒருவரும் அரசு டிரைவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு இறந்திருந்தார். ஆனால் இறந்தவரின் ஆட்டோ  புறநகர் டெல்லியின் அலிப்புர் அடுத்த பக்தாவர்புர் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து காவல்துறை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜய் குமார் தலைமையில் போலீஸ் குழு, பக்தாவர்புர் கிராமத்து மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வரும் ஷிவகுமார் மற்றும் அவரின் தங்கை நீலம்  இருவரும் அடிக்கடி இரவில் தாமதமாக வீடு திரும்புவது பற்றிய விவரம் தெரிய வந்தது. அதையடுத்து அந்த 2 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இருவரும் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். 

இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. அதாவது, ‘இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காத்திருந்து, லிப்ட் கேட்பதும், லிப்ட் கிடைத்து வாகனம் செல்லும்போது, டிரைவரை கழுத்து நெரித்து கொன்று, வாகனம், பணம் உள்ளிட்ட கிடைக்கும் பொருட்களை  கொள்ளை அடித்து வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.

தனியாக இரவு நேரத்தில் லிப்ட் கேட்டால், நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்த மாட்டார்கள் என்பதால், கவர்ச்சியாக இருந்தால் வாகனம் உடனே நிற்கும் எனக் கருதி, தங்கையை திட்டத்துக்கு பயன்படுத்தி கொலை, கொள்ளையில் ஈடுபட்டேன் என ஷிவகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். டிரைவருக்கு ஆசை காட்டும் வகையில் காரில் முன் பக்க இருக்கையில் நீலம் அமர்ந்து கொள்வார் என்றும், டிரைவருடன் ஆசை வார்த்தை பேசிக்கொண்டு வரும் நீலம், தனியான இடத்தில் காரை நிறுத்த வைப்பார், அப்போது பின்பக்க இருக்கையில் இருந்து சகோதரியின் துப்பட்டாவை பயன்படுத்தி கழுத்தை நெரித்து ஆட்டோரிக்‌ஷா டிரைவரை கொலை செய்தேன்’ என அவர் தங்களது கொலை, கொள்ளையை விவரித்து உள்ளனர்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்  விசாரணை நடைபெற்று வருகிறது.