லாக்டவுனால் கை விட்ட உள்நாடு…. தூக்கி விட்ட வெளிநாடு…. 37,878 வாகனங்களை ஏற்றுமதி செய்த பஜாஜ் ஆட்டோ…
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 37,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதுவும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததுதான் உள்நாட்டில் ஒரு வாகனத்தை கூட அந்நிறுவனம் விற்பனை செய்யவில்லை.
தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை கடந்த மார்ச் 25ம் தேதி இம்மாதம் 17ம் தேதி வரை மொத்தம் 54 நாட்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த 3ம் தேதி வரை லாக்டவுன் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் வாகன டீலர்கள் கடையை திறக்கவில்லை மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு ஆலையை மூடின.
லாக்டவுனால் மாருதி, ஹுண்டாய் உள்ளிட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை தகவல் தெரிவித்தன. தற்போது நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவும் கடந்த மாதம் உள்நாட்டில் ஒரு வாகனத்தை கூட விற்பனை செய்யவில்லை என தெரிவித்துள்ளது. அதேசமயம் பைக் மற்றும் வர்த்தக வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 32,009 இரு சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் 5,869 வர்த்தக வாகனங்களை சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. ஆக கடந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 37,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது அதுவும் வெளிநாடுகளுக்குதான். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2029 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 4.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது அந்நிறுவனத்தின் கடந்த ஏப்ரல் விற்பனை 91 சதவீதம் சரிவு கண்டுள்ளது.