ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயார் – தமிழக அரசு
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயார் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் ரவிசந்திரனும் ஒருவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், இவரது தாயார் ராஜேஸ்வரி தாக்கல் செய்திருந்த மனுவில் தனக்கு 62 வயதாகிவிட்டதால் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும், சொத்து, வேளாண் விவகாரங்களை தனியாக கையாள இயலாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி 7 பேரையும் விடுவிக்கத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், விடுதலை செய்ய உத்தரவு வரும் வரை தனது தனது மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கவும் கோரியிருந்தார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீண்ட விடுப்பு கோரினால் முடிவெடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும், மனுதாரர் முறையான காரணங்களுடன் விண்ணப்பித்தால், 10 நாள் பரோல் வழங்க தயார் என்றும் நீதிபதியிடம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, தமிழக அரசு கூறிய தகவல்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.