மோதிரம், செயின், பெல்ட் என 2 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்து உலா வரும் கூகுள் கோல்டன் பாபா….
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதிரம், செயின், கண்ணாடி, பெல்ட் என 2 கிலோ தங்க ஆபரணங்களை அணிந்து உலா வருகிறார் கூகுள் கோல்டன் பாபா எனப்படும் மனோஜ் செங்கர்.
உத்தர பிரதேசம் கான்பூரை சேர்ந்தவர் மனோஜ் செங்கர். பல ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் மகாபாரத தொடரை பார்த்தது முதல் இவருக்கு தங்கத்தின் மீது தீராத மோகம் ஏற்பட்டது. இதனையடுத்து தினமும் தங்க நகைகளை அணிய தொடங்கினார். இவரிடம் 12க்கும் மேற்பட்ட தங்க செயின்கள் உள்ளது மற்றும் அனைத்து விரல்களிலும் தங்க மோதிரங்களை அணிந்துள்ளார். அவர் அணிந்துள்ள ஷூ வெள்ளியால் ஆனது.
அவரது பெல்ட் மற்றும் கண்ணாடி தங்கத்தால் ஆனவை. மேலும் அவர் தனது பாதுகாப்புக்காக வாங்கிய துப்பாக்கி கூட தங்கம்தான். இப்படி குறைந்தபட்சம் 2 கிலோ தங்க நகைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்து கொண்டுதான் கடந்த 10 ஆண்டுகளாக தினமும் வெளியே வருகிறார். பல முறை மனோஜ் செங்கர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். மேலும் குறைந்தபட்சம் நான்கு தாக்கப்பட்டுள்ளார். ஆனால் செங்கர் தங்க நகைகளை அணிவதை கைவிடவில்லை. அதற்கு பதிலாக 2 ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை தனது பாதுகாப்புக்கு நியமனம் செய்தார்.
கூகுள் கோல்டன் பாபா என அந்த பகுதியில் மனோஜ் செங்கர் பிரலமாகி விட்டார். மேலும் அவரை உத்தர பிரதேசத்தின் பப்பி லஹரி என அழைக்கின்றனர். மனோஜ் செங்கர் குடும்பத்தினருக்கு அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என விரும்புகின்றனர். அந்த காலத்தில் மன்னர்கள் உடம்பில் அணியும் கவசம் போன்று தங்க கவசம் செய்து அணிய வேண்டும் என கூகுள் கோல்டன் பாபாவுக்கு தற்போது ஆசை பிறந்துள்ளது.