மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

 

மேகேதாட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

டெல்லி: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திலும் மேகேதாட்டுவில் கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகத்தின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேலும், மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், காவிரியில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.