மேகேதாட்டுவில் கர்நாடகா அணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்

 

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்

மேகேதாட்டுவில் அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறையின் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது

சென்னை: மேகேதாட்டுவில் அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறையின் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ரூ.5,929 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டு அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, மேகேதாட்டுவில் அணை குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறையின் ஆணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.