மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டு; வாய் திறப்பாரா ஸ்டாலின்?

 

மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் பாலியல் குற்றச்சாட்டு; வாய் திறப்பாரா ஸ்டாலின்?

மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.

சென்னை: மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் நேற்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். இருப்பினும் இந்த ஆடியோ உண்மையாக இருந்தால் ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது என பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார் ஆடியோ குறித்து திமுக தலைவரோ, அந்த கட்சியினரோ பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யாமல் இருந்து வருகின்றனர். அந்த ஆடியோ உண்மைதான் என நிச்சயமாக தெரிந்த பிறகு இதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் என கட்சியினருக்கு மேலிடம் சொல்லி இருக்கிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. 

ஆனால் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மீதே பாலியல் குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்திருப்பதால், ஜெயக்குமார் ஆடியோ விவகாரத்தை திமுகவினர் இனி கையில் எடுத்து அமைச்சருக்கும், அதிமுகவுக்கும் குடைச்சல் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும், ஸ்டாலின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கும் அமைச்சர் முடிந்தால் அதை நிரூபிக்கட்டும் எனவும் திமுகவினர் கூறி வருகின்றனர்.