முன்னாள் மேயர் படுகொலை: நிர்க்கதியாக நின்ற பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதியுதவி!
நெல்லை ரெட்டியார் பட்டியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் கொலை சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பத்துக்கு திமுக சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை ரெட்டியார் பட்டியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியதோடு, நெல்லை சென்ற அவர் உமா மகேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது ஒருபுறமிருக்க உமா மகேஸ்வரி வீட்டில் வேலை செய்த மாரியம்மாள் கணவனை இழந்த நிலையில் மூன்று பெண் பிள்ளைகளை காப்பாற்ற வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். தற்போது அவர் கொல்லப்பட்ட நிலையில் அவரின் மூன்று பெண்களும் நிர்க்கதியாகியுள்ளனர். இதனால் அவர்களுக்கு திமுக தலைமை உதவ வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கொலைசெய்யப்பட்ட மாரியம்மாளின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.