முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

 

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். மேலும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். 

மேலும், முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ 3,42,000 கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி தனியார் நிறுவனம் ஒன்று பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?  

2015-ம் ஆண்டு  நடந்த முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?  அப்போது மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?  2015 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என கேள்வி எழுப்பினர்.

மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்ததுடன், முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.