முதலீட்டாளர்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி லாபம்….. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்தது…

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.10 லட்சம்  கோடி லாபம்….. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.

கோடக் மகிந்திரா வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக்மகிந்திரா வங்கி, டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஒ.என்.ஜி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன், இந்துஸ்தான்யூனிலீவர், பவர் கிரிட், என்.டி.பி.சி., எல் அண்டு டி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,458 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 947 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 184 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.123.70 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.10 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 483.53 புள்ளிகள் உயர்ந்து 31,863.08 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 126.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,313.90 புள்ளிகளில் முடிவுற்றது.