மீ டூ-வுக்கு ஆதரவு: ‘ஹவுஸ்ஃபுல் 4’ ஷூட்டிங்கை நிறுத்தி அக்ஷய்குமார் அதிரடி!

 

மீ டூ-வுக்கு ஆதரவு: ‘ஹவுஸ்ஃபுல் 4’ ஷூட்டிங்கை நிறுத்தி அக்ஷய்குமார் அதிரடி!

மீ டூ விவகாரத்தில் தான் நடிக்கும் ‘ஹவுஸ்ஃபுல் 4’ பட இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஷூட்டிங்கை நிறுத்த தயாரிப்பாளர்களுக்கு நடிகர் அக்ஷய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை: மீ டூ விவகாரத்தில் தான் நடிக்கும் ‘ஹவுஸ்ஃபுல் 4’ பட இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஷூட்டிங்கை நிறுத்த தயாரிப்பாளர்களுக்கு நடிகர் அக்ஷய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

நடிகர் நானா பட்டேகர் மீது தனுஸ்ரீ தத்தா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் தொல்லை குறித்து குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாலியல் தொல்லைகளில் சிக்கிய பெண்கள், அதில் தொடர்புடைய பிரபலங்கள் குறித்து பகிரங்கமான புகார்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நானா பட்டேகர் மீதான புகாரை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கவிருக்கும் ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தின் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குநர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபத்யாய் உள்ளிட்டோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை குறித்து அறிந்த நடிகர் அக்ஷய்குமார், தான் நடிக்கவிருந்த ‘ஹவுஸ்ஃபுல் 4’ படத்தின் ஷூட்டிங்கை நிறுத்துமாறு தயாரிப்பாளார்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமாருக்கு வில்லனாக நானா பட்டேகர் நடிக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அக்ஷய்குமார், இத்தாலியில் இருந்து இன்று தான் நாடு திரும்பினேன். ஊடகங்களில் வரும் பாலியல் தொல்லை குறித்த செய்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதனால், இன்று நடக்கவிருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிடுமாறு கூறிவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்’ என அக்ஷய்குமார் ட்வீட்டியுள்ளார்.

முன்னதாக நானா பட்டேகர் மீது தனுஸ்ரீ தத்தா புகார் கூறியதற்கு அக்ஷய்குமாரின் மனைவியும், நடிகையுமான ட்விங்கிள் கண்ணா ஆதரவளித்திருந்தார். அப்போது தனுஸ்ரீ, நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள் ஆனால் உங்கள் கணவர் பாலியல் குற்றவாளிகளுடன் நடிக்கிறார். அதை தவிர்க்க சொல்லுங்கள் அதுவே போதும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.