மீ டூ விவகாரத்தில் சிக்கிய ’திருட்டுப்பயலே’ இயக்குநர்?

 

மீ டூ விவகாரத்தில் சிக்கிய ’திருட்டுப்பயலே’ இயக்குநர்?

இயக்குநர் சுசி கணேசன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக பெண் இயக்குநர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை: இயக்குநர் சுசி கணேசன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்ததாக பெண் இயக்குநர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது. ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, பாடகர் கார்த்திக் உள்ளிட்டோரை தொடந்து, இந்த மீ டூ சர்ச்சையில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசி கணேசனும் சிக்கியுள்ளார்.

தமிழில், ‘5 ஸ்டார்’, ‘திருட்டுப்பயலே’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் மீது குறும்பட இயக்குநரும், கவிஞருமான லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இயக்குநர் சுசி கணேசன் தன்னை காருக்குள் இழுத்து கதவை சாத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்’ என்ற தனது மீ டூ அனுபவத்தை விளக்கமாக பகிர்ந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆண்டு பகிர்ந்துள்ளார். தற்போது மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கதை குறித்து மீண்டும் பகிர்வதாக லீனா தெரிவித்துள்ளார்.