மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்: பின்னணி என்ன?
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். விஜயகாந்த் விரைவில் முழு குணமாகி முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
— Vijayakant (@iVijayakant) December 18, 2018
இந்நிலையில் விஜயகாந்த் இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக தற்போது மீண்டும் பயணம் சென்றுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அவருடன் அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா, அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் , வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்வார் என்றும் ஏற்கனவே அவரது மகன் விஜய் பிரபாகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.