மாற்று சமூகப் பெண்களை கட்டிப்பிடிப்போம்: ஹெச்.ராஜாவுக்கு திருமாவளவன் கேள்வி
மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம் என முழக்கமிட்ட இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என எதை வைத்து தீர்மானித்தீர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை: மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம் என முழக்கமிட்ட இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என எதை வைத்து தீர்மானித்தீர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளில் அவரது படத்துக்கு மாலையிட்டு மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம், திருமணம் செய்வோம் என இளைஞர் ஒருவர் முழக்கமிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என பாமக சார்பில் வேலூர் குடியாத்தத்தில் புகார் கொடுத்து அதற்கு சி.எஸ்.ஆரும் வாங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திருமாவளவன் போன்றோரின் சரக்கு மிடுக்கு பேச்சே இதற்கு காரணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு திருமாவளவன் போன்றோரின் சரக்கு மிடுக்கு பேச்சே காரணம். இம்மாதிரி போக்கு சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளேன். இம்மாதிரி செயல்கள் அண்ணன் அம்பேத்கர் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். https://t.co/jDLwz3dfCy
— H Raja (@HRajaBJP) December 7, 2018
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், அந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சார்ந்தவரா அல்லது வேறு சமூகத்தைச் சார்ந்தவர்தானா? என்கிற சந்தேகம் உள்ளது. அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என சிலரும் சொல்கின்றனர். யாராக இருந்தாலும் அந்த முழக்கம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தலித் இளைஞர்கள் இவ்வாறு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.
முழக்கமிட்ட இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என தெரிவித்த திருமா, அவர் விசிக கட்சியை சேர்ந்தவர் என ஹெச்.ராஜா எதை வைத்து தீர்மானித்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மீது அபாண்டத்தை ஹெச்.ராஜா புகுத்துவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.