மத்திய அரசு வரியை நீக்கியதால் டி.வி. விலை குறைய வாய்ப்பு

 

மத்திய அரசு வரியை நீக்கியதால் டி.வி. விலை குறைய வாய்ப்பு

டி.வி.யின் ஒப்பன் செல் பேனல்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியதால் டி.வி. விலை 3.5 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஜூனில்  டி.வி.யின் ஒப்பன் செல் பேனல்களில் பயன்படுத்தும் சிப் மற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு உள்ளிட்ட உதரிபாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு 5 சதவீதம் வரி விதித்தது. டி.வி. தயாரிப்பு செலவினத்தில் 70 சதவீதம் பங்கினை இவை கொண்டுள்ளன. இறக்குமதி வரியால் தயாரிப்பு செலவினம் கூடுவதோடு, டி.வி. விலையும் அதிகரிக்கும் எனவே இதனை நீக்க வேண்டும் என டி.வி. தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

பிரிண்டட் சர்க்யூட் போர்டு

இந்நிலையில், எல்.சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி. பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தும் ஒப்பன் செல் (15.6 இன்ஞ் மற்றும் அதற்கு மேல்) இறக்குமதி மீதான வரி 0 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. இதனால் டி.வி. தயாரிப்பு செலவினம் குறையும். அதன் பலனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.வி.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், டி.வி. தயாரிப்பாளர்கள் டி.வி. மாடல்களின் விலையை குறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்ஸ் தயாரிப்பாளார்கள் சங்கம் (சி.இ.ஏ.எம்.ஏ.) இது தொடர்பாக கூறுகையில், நாட்டில் 1.6 கோடி டி.வி.க்கள் தயாரிக்கப்படுகிறது. ரூ.40 ஆயிரம் கோடிக்கு எல்.இ.டி. டி.வி.க்கள் விற்பனையாகிறது. தற்போது இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால் நிறுவனங்கள் விலை 3.5 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தது.