மது குடிப்போரின் நலனுக்காக திருவாரூரில் போட்டியிடும் குடிமகன்: டெபாசிட் தொகைக்காக என்ன செய்தார் தெரியுமா?

 

மது குடிப்போரின் நலனுக்காக திருவாரூரில் போட்டியிடும் குடிமகன்: டெபாசிட் தொகைக்காக என்ன செய்தார் தெரியுமா?

திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகைக்காக வீதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை சுயேச்சை வேட்பாளர் சேகரித்ததும்,கிழிந்த பனியன் அணிந்தபடி விண்ணப்பம் வாங்குவதற்காக விவசாயி ஒருவர் வந்ததும் வியப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் : திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகைக்காக வீதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை சுயேச்சை வேட்பாளர் சேகரித்ததும், கிழிந்த பனியன் அணிந்தபடி விண்ணப்பம் வாங்குவதற்காக விவசாயி ஒருவர் வந்ததும் வியப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று திருவாரூர் வட்டாசியர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் விண்ணப்பம் வாங்க வந்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருவாரூரில் டாஸ்மாக்கடை, பஸ் நிலையம், சாலை ஓரம் உள்ளிட்ட பகுதிகளில் கிடந்த காலி மது பாட்டில்களை தாங்கள் வைத்திருந்த சாக்குப்பையில் ஆறுமுகம், தன்னுடன் வந்தவருடன் சேகரித்தார்.

இது குறித்து ஆறுமுகம் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிக அளவில் மது குடிப்போர் இருக்கின்றனர். எனவே மது குடிப்போரின் நலனுக்காகத் திருவாரூர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுகிறேன். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகைக்காக, டாஸ்மாக் கடை வீதிகளில் கிடக்கும் மது பாட்டில்களை தான் சேகரித்து அதில் இருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு டெபாசிட் கட்டி மனு தாக்கல் செய்யப் போகிறேன்’ என்றார்.

இதேபோல் விவசாயி ஜெயராமன், கிழிந்த பனியனுடன், கழுத்தில் டை கட்டியபடி விண்ணப்பம் வாங்க வந்து இருந்தார். அவரிடம் கிழிந்த பனியனுடன் மனு வாங்க வந்தது ஏன்? என்று கேட்டதற்கு, தமிழகத்தின் நிலையும், தமிழக விவசாயிகளின் நிலையும் சிதைந்து இருப்பதாகவும், அதனாலேயே தான் கிழிந்த பனியனுடன் மனு வாங்க வந்ததாகவும் கூறினார். 

திருவாரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களின் இது போன்ற நடவடிக்கைகள் தேர்தல் களத்தைச் சூடுபிடிக்க வைத்துள்ளது.