‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி தலைவர் கமலுக்கு ரஜினி ஆதரவு! இது பா.ஜ.க-வின் உள்குத்து அரசியலா!?
அரசியலில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ‘கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று சொன்ன ரஜினிகாந்த்,கூடவே,தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொல்லியிருந்தார்.
அது குறித்து’ மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் கமலஹாசனிடம் கருத்து கேட்டபோது ‘அவர் எந்த தண்ணியைப் பற்றி சொல்கிறார் என்பது தெரிந்தால்தான் கருத்து சொல்ல முடியும் ‘என்று பதிலளித்திருந்தார்.அவர் ரஜினியை கிண்டலடிக்கிறார் என்று, ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமலுக்கு எதிராக பொங்கியிருந்தார்கள்.
அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத கமல்,மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைகிறது.இதைத்தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 40 தொகுதியிலும் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கமல் ஹாசனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதனிடையே ரஜினிகாந்த், தனக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறேன் என கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…
— Rajinikanth (@rajinikanth) February 24, 2019
இந்த நிலையில் ரஜினி இப்படி ட்வீட் தட்டி விட்டிருப்பதன் மூலம் அவர் கமலுக்கு தனது ஆதவு நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இன்னும் சிலர் கமல் மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்தான்.ரஜினியின் இந்த அறிவிப்பின் மூலம் ‘மக்கள் நீதி மையம்’ அமைக்க விருக்கிற மூன்றாவது அணிக்கு கணிசமான எம்.பி சீட் கிடைக்கும் பட்சத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கும் போது பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவே இப்படியொரு முடிவை ரஜினி எடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு கடந்த சில நாட்களாக நடக்கும் கூட்டணி காட்சிகளே சாட்சி ;அதில் இதுவும் ஒரு காட்சி!