மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வெல்லுமா இந்திய அணி?

 

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நாளை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பை வெல்லுமா இந்திய அணி?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் குரூப் ஏ பிரிவில் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி அட்டகாசமாக வென்றது. இங்கிலாந்து அணியுடன் இன்று நடைபெறவிருந்த அரையிறுதி போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படமால் கைவிடப்பட்டது. அதனால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி 4 லீக் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. அதனால் அதிக வெற்றிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இம்முறை இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றினால் மகளிர் கிரிக்கெட் அணிக்கு நாடு முழுக்க பலத்த பாராட்டும், வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும். இந்திய நேரப்படி நாளை மதியம் 12.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இறுதிப் போட்டிக்கு மழை ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மழை குறுக்கிட்டாலும் மாற்று நாள் (ரிசர்வ் டே) இருக்கிறது. நேற்று வரை இந்த போட்டிக்காக சுமார் 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதனால் அதிக ரசிகர்கள் பார்க்கும் பெண்கள் போட்டியாக இது அமையும் என்று கருதப்படுகிறது.