போராட்ட களமானது சபரிமலை: 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்த கேரளா காவல்துறை!

 

போராட்ட களமானது சபரிமலை:  200 பேர் மீது வழக்குப் பதிவு செய்த கேரளா காவல்துறை!

சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கேரளா: சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும்  இருந்து வருகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து, இரண்டு நாட்களாகப் பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்று இறுதியில் இந்து அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் பாதி வழியில் திரும்பினர்.  

தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்றுள்ளதால் பாதுகாப்பு கருதி நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், சபரிமலை கோவில் வட்டாரத்தில்  கடந்த 2 நாட்களாகப் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.