பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்ததில் தவறில்லை: பினராயி விஜயன் அதிரடி

 

பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்ததில் தவறில்லை: பினராயி விஜயன் அதிரடி

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை காவல்துறை தடுத்ததில் தவறு ஏதும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை காவல்துறை தடுத்ததில் தவறு ஏதும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். அப்போது நிலக்கல்லில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி யதீஷ் சந்திரா, அவரது காரை தடுத்து நிறுத்தினார். முக்கிய பிரமுகர் என்ற முறையில் பொன்.ராதாகிருஷ்ணனி காரை மட்டும்தான் அனுமதிக்க முடியும் என்று கூறியதால் அவர் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் பம்பைக்கு பயணம் செய்தார். மேலும் காவல்துறையினருடன் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு வாதம் செய்யும் வீடியோவும் வெளியாகி வைரலாகியது.

இதனையடுத்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு பொன். ராதாகிருஷ்ணன், திரும்பியபோதும் அவரது காரை தடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். கேரள காவல்துறையினர் பொன். ராதாகிருஷ்ணனை அவமதித்து விட்டதாக கூறி குமரியில்  நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்,சபரிமலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் சரியான முறையில் நடந்து வருகிறார்கள். அங்கு வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதுதான் காவல்துறை யினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் காவல்துறை அதிகாரி யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. 

தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டதால்தான் அவருடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானது. அதில் எந்த தவறுமில்லை. கேரளாவில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுபவர்கள். அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை பிரச்னையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது என்றார்.