பொங்கல் பண்டிகை: எந்த ஊருக்கு எங்க இருந்து பஸ் ஏறனும்?-முழு விவரம்

 

பொங்கல் பண்டிகை: எந்த ஊருக்கு எங்க இருந்து பஸ் ஏறனும்?-முழு விவரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், பொதுவாகவே பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழர்களின் முக்கிய பண்டியான பொங்கல் திருநாளை சொந்த ஊர்களில் கொண்டாடும் பொருட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பி செல்வர். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்து 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து ஜன.11-ம் தேதி முதல் ஜன. 14-ம் தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜன.9-ம் தேதி தொடங்குகிறது. பொங்கலையொட்டி ஜன.11 முதல் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு ஜன.17 முதல் ஜன.20 வரை 3776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து பிற முக்கிய ஊர்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 7841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும்.

பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

தாம்பரம் சானிடோரியத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்