பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்க ஏற்பாடு!
கிரேஸ்பானு கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். சமூக நலத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேஸ்பானு கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். சமூக நலத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில் மூன்றாம் பாலினத்தவருக்காக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டும் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகள், திருநம்பிகளை 3-ம் இனத்தவராக அங்கீகரித்து அவர்களுக்கு அடையாள அட்டை, குடும்பநல அட்டை, வாக்காளர் அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் 2018-ம் ஆண்டு வரை 515 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 40 வயதை கடந்த 3-ம் பாலினத்தவருக்கு ஆண்டுக்கு ரூ.1.20 கோடி வழங்கப்படுகிறது.
2017-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, சாதி சான்றிதழ் இல்லாத 3-ம் பாலினத்தவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவார்கள். தன்னை பெண்ணாக அறிவித்துள்ள திருநங்கைகள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும், 70 சதவீத பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க வழங்கப்பட்ட ரூ.20 ஆயிரத்தை கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரமாக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3-ம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.