பூஞ்ச் செக்டாரில் மீண்டும் ஊடுருவ முயன்ற பாக்., விமானங்கள்!?

 

பூஞ்ச் செக்டாரில் மீண்டும் ஊடுருவ முயன்ற பாக்., விமானங்கள்!?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டாரில் மீண்டும் இரு பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டாரில் மீண்டும் இரு பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்களின் இழப்புக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்திய விமான படை எல்லையை கடந்து பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கியது. அதில், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அறிவித்தது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.

இதையடுத்து, இந்திய எல்லைக்குள் நேற்று நுழைந்த பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தியதாக இந்திய ராணுவம் அறிவித்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியுள்ளோம், விமானி ஒருவரை கைது செய்துள்ளோம் என்றது. இந்திய விமானப்படை விமானத்தை விமானியுடன் காணவில்லை என இந்திய அரசும் அதனை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி சென்னையை சேர்ந்த அபிநந்தன் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தொடர்ந்து ஆயுத பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லை புறங்களில் விமானப்படை தாக்குதல்கள் இரு தரப்பிலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டாரில் மீண்டும் இரு பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்திய ராணுவமும், விமானப்படையும் இன்று ஐந்து மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.