புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தில்லி பயணம்

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தில்லி பயணம்

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண் பேடிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்ததால், முதலமைச்சருடன், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், டிஜிபி சுந்தரி நந்தா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், நாராயணசாமியின் போராட்டமானது இரவிலும் நீடித்தது. முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் சாலையிலேயே உறங்கினர். அதேசமயம் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தவிர மற்றவர்கள் கலைந்து செல்ல முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார். கலைந்துசெல்ல மறுத்தவர்களை ஆளுநர் மாளிகை பகுதியில் இருந்து காவல்துறையினர் அப்புறபடுத்தினர்.

விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டமானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதற்கிடையே, சென்னை, நெய்வேலியிலிருந்து அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படையினர் புதுச்சேரிக்கு வருகை புரிந்தனர். தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சகம் படைகளை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிவிரைவுப்படை வீரர்கள் பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய கிரண் பேடி, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், தில்லி செல்வார் என தெரிகிறது.