புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்! களை கட்டிய பங்கு வர்த்தகம்

 

புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்! களை கட்டிய பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் அமர்களமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தை தொட்டது.

அமெரிக்க பெடரல் வங்கி அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே நேற்று வட்டி விகிதத்தை குறைத்தது. அதனால் அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மேலும் இந்திய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், யெஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டல், எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டெக்மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, வேதாந்தா உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

யெஸ்  பேங்க்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,540 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,017 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.83 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.18 புள்ளிகள் உயர்ந்து 40,129.05 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 33.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,877.45 புள்ளிகளில் முடிவுற்றது.