பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை அடித்து கொன்ற தாய்: பகீர் வாக்குமூலம்; பின்னணி என்ன?
பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு மூச்சு திணறி குழந்தை இறந்து போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு மூச்சு திணறி குழந்தை இறந்து போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். கொத்தனார் வேலை செய்து வரும் இவர் செலஸ்டினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த செலஸ்டினுக்கு, சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு செலஸ்டினா குழந்தைக்கு பாலூட்டினார். பின்னர் குழந்தையை தூங்க வைத்தார். அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டினா கூறியுள்ளார். சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் பின் மண்டை உடைபட்டு இறந்துள்ளதாகத் தெரியவந்தது.
இதனையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் குழந்தையின் தாய் செலஸ்டினாவிடம் விசாரணை நடத்தினர். அதில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன, அதில், ‘கணவர் சத்யராஜுக்கு ஜெயந்தி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று 3 வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. கணவன் ஏற்கெனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நான் இந்த குழந்தையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதை விட குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன். இதனால் மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை காலைப் பிடித்து தரையில் ஓங்கி அடித்தேன். அது அலறி துடித்து மயங்கி இறந்தது. உடனே குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காசிமேடு போலீசார் தாய் செலஸ்டினாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.