பிரபல நடிகை பானுபிரியா மீது வழக்குப்பதிவு: அதிர்ச்சியில் திரைத்துறை!
சிறுமியின் தாய் பிரபாவதி ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
சென்னை: தனது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானு பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகை பானு பிரியா தனது வீட்டில் பணியாற்றும் சிறுமி மற்றும் தாய் பிரபாவதி ஆகியோர் வீட்டிலிருந்து 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாகப் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் தந்ததாகச் சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டதையடுத்து தாய், மகள் இருவரையும் சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாய் புழல் சிறையிலும், சிறுமி சென்னை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக 14 வயது சிறுமி சந்தியாவை கொடுமைப்படுத்துவதாக, அச்சிறுமியின் தாய் பிரபாவதி ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆந்திர போலீசார், பானு பிரியா மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்தனர். புகார் ஆந்திராவில் கொடுக்கப்பட்டது. பானு பிரியா சென்னையில் வசிக்கிறார். அதனால் இந்த வழக்கை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆந்திர போலீசார் இந்த வழக்கின் கோப்பினை தற்போது சென்னை போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். அதன்படி சென்னை பாண்டிபஜார் போலீசார் பானு பிரியா மற்றும் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றங்கள் செய்ததாகச் சிறார் நீதி குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் 323 – காயம் ஏற்படுத்துதல், 506 – மிரட்டுதல், அவமதித்தல், தொந்தரவு தருதல் மற்றும் 341 – சிறை வைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.