பிரபல சின்னதிரை நடிகையிடம் உபேர் டிரைவர் அத்துமீறல்: கைது செய்த போலீசார்!
தத்தாவிடம் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார். மேலும் அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளார்
கொல்கத்தா: காரில் சென்று கொண்டிருந்த நடிகையை, வெளியே இழுத்து அநாகரிகமாக நடந்துகொண்ட உபேர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பிரபல வங்கமொழி டிவி நடிகை ஸ்வஸ்திகா தத்தா. இவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல நேற்று காலை உபேர் காரை புக் செய்திருந்தார். ஜம்ஷத் என்ற டிரைவர் வர காரில் ஏறி சென்றுள்ளார் ஸ்வஸ்திகா. காலை 8.15 மணிக்கு தேவ் தாஸ் ரெஸ்டாரண்ட் அருகில் சேர்ந்தும் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டுக் காரை விட்டு இறங்கும்படி கூறினார். அதற்கு ஸ்வஸ்திகா தத்தா பாதியில் இறங்க முடியாது என்று மறுத்துள்ளார். உடன் அந்த டிரைவர் காரை தன்னுடைய வீட்டுக்கு கொண்டு சென்று, அங்கு ஸ்வஸ்திகா தத்தாவிடம் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளார். மேலும் அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வஸ்திகா தத்தா கூச்சலிட்டுக் கத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி தனது அப்பாவுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து ஸ்வஸ்திகா தனது பேஸ்புக் பக்கத்தில் , அந்த டிரைவரின் பெயர், புகைப்படம் என முழுவதுமாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்வஸ்திகா கொடுத்த புகாரின் பேரில், உபேர் டிரைவர் ஜம்ஷத் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கொல்கத்தாவில் நடிகை உஷோஷி சென்குப்தா இதே போன்று காரில் செல்லும் போது சிறுவர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.