பிரதமர் மோடி இந்தியாவின் இந்து ஜின்னா- அசாம் முன்னாள் முதல்வர் கடும் தாக்கு…

 

பிரதமர் மோடி இந்தியாவின் இந்து ஜின்னா- அசாம் முன்னாள் முதல்வர் கடும் தாக்கு…

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் இந்து ஜின்னா. மத அடிப்படையில் இந்தியாவை பிளவுப்படுத்திய பிரிவினையின் போது பாகிஸ்தானின் ஜின்னா பிரச்சாரம் செய்த இருநாடு கொள்கையை மோடி பின்பற்றுகிறார் என அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ஜவஹர்லான் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தாக்குப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: பா.ஜ.க. அரசின் அடக்குமுறை கொள்கையின் வெளிப்பாடுதான் இந்த தாக்குதல். இது இந்தியாவுக்கு மேலும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

பிரதமர் மோடி

நாங்கள் பாகிஸ்தானியர்கள் போல் பேசுவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் அவர்தான் பக்கத்துநாட்டின் தரத்துக்கு தன்னை தாழ்த்தி உள்ளார். மத அடிப்படையில் இந்தியாவை பிளவுப்படுத்திய பிரிவினையின் போது, பாகிஸ்தானை உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த இருதேச கொள்கைகளை மோடி பின்பற்றுகிறார். அவர் இந்தியாவின்  இந்து ஜின்னாவாக உருவெடுத்துள்ளார்.

முகமது அலி ஜின்னா

பா.ஜ.க. மற்றும் அதன் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்துத்வா தங்களுக்கு தேவையில்லை என்பதை, நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் வாயிலாக இந்தியர்கள் தெளிவாக சொல்லியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.