பாம்பை பார்த்தவுடன் முதல்வருக்கு போன்: நள்ளிரவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! இப்படியும் ஒரு முதல்வரா?
நள்ளிரவில் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு பெண் அழைப்பு விடுத்ததும், அவர் உடனடியாக உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை: நள்ளிரவில் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு பெண் அழைப்பு விடுத்ததும், அவர் உடனடியாக உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், நேற்று முன்தினம் இரவு பணி காரணமாக வெளியூருக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில், ராஜாவின் மனைவி விஜயா, மகன், மகள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் உருளும் சத்தம்கேட்டதால் பயந்துபோன விஜயா விளக்கைப் போட்டுப் பார்த்திருக்கிறார். அப்போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து சீறிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே தூங்கிக் கொண்டிருந்த தன் பிள்ளைகளை எழுப்பியதுடன், அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர்கள் வனத்துறையின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறார்கள். வனத்துறைக்கு போன் செய்தால், அங்கு யாரும் போனை எடுக்கவில்லை. இதனால், மேலும் பதற்றம் அடைந்த விஜயா, அரசு டைரியில் கொடுக்கப்பட்டிருந்த முதல்வர் நாராயணசாமியின் செல்போன் நம்பருக்கு அழைத்து, விவரத்தை கூறியுள்ளார்.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி, உடனடியாக எழுந்து விடுமுறையில் இருந்த கோபி, தாமரைச்செல்வன் என இரண்டு ஊழியர்களை உடனே அனுப்பி பாம்பைப் பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு விஜயா வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்கிருந்த விஷப் பாம்பை அங்கிருந்து பிடித்துச் சென்றனர்.
நள்ளிரவில் செல்போன் எண்ணிற்கு அழைத்த போதும், விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் நாராயணசாமிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.