பாமக-வை வீழ்த்த வியூகம்; உதயநிதி ரசிகர்களைக் களமிறக்கும் திமுக வேட்பாளர்!

 

பாமக-வை வீழ்த்த வியூகம்; உதயநிதி ரசிகர்களைக் களமிறக்கும் திமுக வேட்பாளர்!

நாடாளுமன்ற தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்றான அரக்கோணம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்களை திமுக வேட்பாளர் களமிறக்க திட்டமிட்டுள்ளார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்றான அரக்கோணம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்களை திமுக வேட்பாளர் களமிறக்க திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்களுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் பிராதன கட்சிகளான திமுக, அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் வடமாவட்டங்களில் உள்ள முக்கியமான நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான அரக்கோணத்தில் திமுக-பாமக நேரடியாக மோதுகிறது.

திமுக-பாமக-வுக்கு கணிசமான வாக்கு வங்கிகள் உள்ள அரக்கோணத்தில் கடந்த தேர்தலின் போது அதிமுக தனியாக களம் கண்டு வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்கும் அதிமுக, அரக்கோணத்தை பாமக-வுக்கு ஒதுக்கியுள்ளனது. பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தியும், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அரக்கோணம் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பாமக-வை வீழ்த்தும் நோக்கில், இளைஞர்களின் வாக்குகளை கவரும் பொருட்டு உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்களை களமிறக்க ஜெகத்ரட்சகன் வியூகம் அமைத்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் தலைவர் சரவணன் தலைமையில் ரசிகர்களை ஒருங்கிணைத்துள்ள ராணிப்பேட்டை எம்.எல்.ஏ.காந்தி, அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.