பள்ளி மாணவர்களிடையே ஜாதி சண்டை : காவலர்கள் அளித்த நூதன தண்டனை..!
வ.உ.சி மைதானத்தில் இருந்த மாணவர்கள் இடையே ஜாதி ரீதியாகக் கயிறு கட்டுவது குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை அருகே உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளியை கட் அடித்து விட்டு வெளியே சுற்றுவது, பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து சைட் அடிப்பது, கைகளில் ஜாதி ரீதியாகக் கயிறுகளைக் கட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களைப் பல முறை அப்பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது. அதனைப் பொருட்படுத்தாமல், மாணவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து வந்துள்ளனர். வழக்கம் போல, பள்ளியை கட் அடித்து விட்டு இன்று வ.உ.சி மைதானத்தில் இருந்த மாணவர்கள் இடையே ஜாதி ரீதியாகக் கயிறு கட்டுவது குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர், அங்கிருந்த அனைத்து மாணவர்களையும் குண்டுக் கட்டாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவலர்கள் கூட்டிச் சென்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் காவல்துறையினர் தகவல் அளித்துக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர்.
அதன் பின்னர், அந்த அனைத்து மாணவர்களையும் திருக்குறள் புத்தகத்தில் உள்ள 1330 குறளையும் காவல்துறை வளாகத்திலேயே அமர்ந்து எழுதிக் காட்டிவிட்டுச் செல்லும் படி உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, மாணவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து திருக்குறளை எழுத ஆரம்பித்துள்ளனர். மாணவர்களை அடிக்காமல், திட்டாமல் காவல் துறையினர் மாணவர்களுக்கு அளித்த இந்த தண்டனை பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.