பணிக்குத் திரும்பினால் விரும்புகின்ற இடத்திற்கு பணியிடமாற்றம்: தமிழக அரசு

 

பணிக்குத் திரும்பினால் விரும்புகின்ற இடத்திற்கு பணியிடமாற்றம்: தமிழக அரசு

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்புகின்ற இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

சென்னை: போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்புகின்ற இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்திருந்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் 7-வது நாளாக நீடித்து வருகிறது. ஒருவேளை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்றும் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

இதற்கிடையே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளியை இயக்கவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக, மூன்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் 2 ஆசிரியர்களைக் கொண்ட குழு, தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இறுதி செய்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் கேட்கும் இடத்தில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தால் அந்த இடம் காலியாக கருதப்பட்டு அங்கு பணியிடமாற்றம் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.