பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்! சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது…

 

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்! சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய நிதியமைச்சர் சீதாராமன் – அன்னிய முதலீட்டாளர்கள் சந்திப்பு, முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை குவித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி, பஜாஜ் பைனான்ஸ், வேதாந்தா, எச்.டி.எப்.சி. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், டெக் மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சன்பார்மா மற்றும் ஐ.டி.சி. உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தை

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,545 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 950 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 161 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.78 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 254.55 புள்ளிகள் உயர்ந்து 37,581.91 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 77.20 புள்ளிகள் உயர்ந்து 11,109.65 புள்ளிகளில் நிலை கொண்டது.