நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்கும் சிவகார்த்திகேயன்!
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமனுடைய மகனின் கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார்.
சென்னை: பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமனுடைய மகனின் கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார்.
இயற்கை விவசாயியான நம்மாழ்வார் உடன் இணைந்து முதலில் இயற்கை விவசாயம் தொடர்பான பல விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டவர் நெல் ஜெயராமன். தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிய அவர், சுமார் 169 பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து மீட்டெடுத்த இவர், பல்வேறு விவசாயிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை காலமானார். நெல் ஜெயராமனின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கிற்காக அவரது உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்வதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இது மட்டுமல்லாமல், நெல் ஜெயராமனுடைய மகனின் கல்வி செலவையும் ஏற்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமனுக்கு நடிகர்கள் பலரும் உதவிய நிலையில், தற்போது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலாக சிவகார்த்திகேயன் உதவிக்கரம் நீட்டியுள்ளார். மேலும், அரசு தரப்பிலும் நெல் ஜெயராமனின் குடும்பத்திற்கு உதவிகள் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.