நிவாரணம் கொடுக்க வந்தவர்களின் பசி ஆற்றுவதிலும் அவர்கள் தனி ரகம் தான்.. ‘ஏனெனில், அது டெல்டா!’
நிவாரணம் கொடுக்க வந்தவர்களுக்கு, அவர்கள் கொண்டு வந்த அரசியிலேயே உணவு சமைத்து பரிமாறியுள்ள டெல்டா மக்களின் பண்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நிவாரணம் கொடுக்க வந்தவர்களுக்கு, அவர்கள் கொண்டு வந்த அரசியிலேயே உணவு சமைத்து பரிமாறியுள்ள டெல்டா மக்களின் பண்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு இறையாகியுள்ள டெல்டா பகுதிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உணவு, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் கொண்டு செல்கின்றனர்.
அப்படி சென்ற ஒரு நண்பர்கள் குழு, அரசி உள்ளிட்ட பொருட்களை கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளனர். ஆனால், வந்தவர்கள் பசியுடன் இருப்பதை உணர்ந்த மக்கள், அவர்கள் கொண்டு வந்த அரிசியிலேயே சமைத்து சாப்பாடு பரிமாறியுள்ளனர்.
இது தொடர்பான தகவலை தன் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள தன்னார்வலர்கள், “நாங்க கொடுத்த அரிசியிலியே உக்கார வெச்சு எங்களுக்கும் பசி ஆற்றிய இந்த தெய்வங்களுக்கு கோடான கோடி நன்றி” என தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘சோறுடைத்த சோழ வள நாடு’ என போற்றப்பட்ட டெல்டா மாவட்டங்கள், எந்த நிலையிலும் தங்களின் தனித்துவமான பழக்கங்களை மட்டும் கைவிடுவதே இல்லை என்று முகநூல் வாசிகள் கூறி வருகின்றனர்.